-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label மன நோய். Show all posts
Showing posts with label மன நோய். Show all posts

Tuesday, August 12, 2014

மன நோய்களை உணர்த்தக்கூடிய கிரக அமைப்புகள்.

மன நோய்களை உணர்த்தக்கூடிய கிரக அமைப்புகள்.

தனி மனித வாழ்க்கை எவ்விதம் அமையப்போகிறது என்பதை கோள்கள் உணர்த்துகின்றன. ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்பட இருக்கும் நிகழ்வுகளின் பலன்களை ஜோதிடம் உணர்த்துகிறது. வெற்றி தோல்வி, நல்லது கெட்டது, பாவம் புண்ணியம் இதுபோன்ற பலன்கள் பெரும்பாலும் மனிதனின் மனநிலையை வைத்தே முடிவு செய்யப்படுகிறது.  உயிரைக் கொல்லுதல் பாவம் என்ற நிலையில் அனைவரும் இருந்தாலும் எந்த உயிரினம் என்பதில் வேறுபாடு உண்டு. பசுவைக் கொன்றால் பாவம் என்ற நிலை ஆட்டிற்கு இல்லை. இது தான் ஒருவருக்கொருவர் மனநிலையில் ஏற்படும் மாற்றம். எந்த மாற்றம் பெரும்பாலோரால் ஒதுக்கப்படுகிறதோ அந்த மனநிலையைத் தான் மன நோய் என்கிறோம்.

மன நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை சில கிரக அமைப்புகள் உறுதிப்படுத்துகின்றன.  ஆட்சி உச்சம் திரிகோணம் நட்பு போன்ற நல்ல நிலையில் உள்ள கிரகங்கள் நல்ல மனநிலையை உணர்த்துகின்றன. மறைவு அஸ்தங்கம், வக்கிரம், பகை போன்ற நிலையில் உள்ள கிரகங்கள் மன நோயின் அறிகுறிகளை உணர்த்துகின்றன. அசுப கோள்கள் மட்டுமல்ல சுப கோள்களும் சில இடங்களில் இருக்கும் போது மன நோய்க்கு காரணமாகின்றன. உதாரணமாக குரு மிகச் சிறந்த சுப கோள் ஆனால் அது இலக்கிணத்தில் உள்ள போது ஜாதகருக்கு மன ரீதியான தடுமாற்றங்கள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.

இலக்கிணத்தில் குருவும் 7ல் செவ்வாயும் உள்ள ஜாதகர் நிச்சயம் மன நிலை பாதிப்புக்குள்ளாகி இருப்பார். குருவும் செவ்வாயும் சுப ஸ்தானத்தில் இருந்தால் இந்த மனநல பாதிப்பு வெளியில் அதிகமாகத் தெரியாது. அதே சமயம் குரு செவ்வாய் இவற்றில் ஏதாவது ஒரு கிரகம் நல்ல நிலையில் இருந்தால் பாதிப்புகள் உடன் இருப்பவர்களை பாதிக்கும் வண்ணம் அமையும். இரு கிரகங்களும் பாவியாகிவிட்டால் நிச்சயம் அவர்கள் மன நோயாளியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்வர். இலக்கிணத்தில் சனியும், 7ல் செவ்வாயும் பாதிப்படைந்தாலும் மனநிலை பாதிப்பு ஏற்படும்.

பலவீனமான சந்திரன் ஜாதகரின் மனநிலையைப் பாதிக்கும். அதனுடன் பாதிக்கப்பட்ட புதனும் சேர்ந்து நீசமாகவோ அஸ்தங்கமாகவோ ஆகிவிட்டால் மன நோயாளியாக இருக்கக்கூடிய சூழ்நிலைகள் அமைந்துவிடும்.  12ல் சனி இருந்து சந்திரன் பாதிக்கப்பட்ட நிலையிலும் மனம் பாதிப்பிற்கு உள்ளாகும்.  இது போன்ற கிரக அமைப்புகள் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?

முதலில் நிம்மதியாக தூங்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 10 மணிநேரத்திற்கு குறைவில்லாத தூக்கம் வேண்டும். சாப்பிடும் சாப்பாடு திருப்திதரக்கூடியதாக சுத்தமானதாக இருக்க வேண்டும். மேலும் சரியான நேரத்திற்கு சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். வெண்மை நிற ஆடைகளை உடுத்த வேண்டும். கோபம் காமம் போன்ற உணர்ச்சிகளுக்கு அடிமையாகமல் அமைதியான வாழ்க்கையை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உடலையைம் மனதையும் பக்குவப்படுத்தும் யோகா தியானம் போன்றவற்றைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.