இது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடைய ஜாதகம் அவருடைய புகழுக்கும் அவருடைய பெருமைக்கும் இந்த ஜாதகத்தில் அப்படி என்ன உள்ளது.
பொதுவாக ஜாதகத்தில் லக்னமும் சந்திரனும் 2 / 12, 6 / 8 ஆக அமைவது சிறப்பான வாழ்க்கையை தராது. இருப்பினும் இந்த ஜாதகத்தில் லக்னமும் சந்திரனும் 2 / 12 அமைந்துள்ளன. மேலும் சந்திரனுக்கு எந்தவித சுபக்கிரகங்களின் தொடர்பும் கிடைக்கவில்லை. மேலும் சனி செவ்வாயின் பார்வை சந்திரனின் மேல் விழுகின்றது.
லக்னமும் சூரியனும் 6/8 அமைந்தால் சிறப்பான தலைமைப் பொறுப்பைத் தராது. சூரியனுக்கு எந்தவித சுபகிரக தொடர்பும் இல்லை. செவ்வாயின் பார்வையிலும் கேதுவின் பார்வையிலும் சூரியன் அமர்ந்துள்ளார். குருவும் சூரியனும் சஷ்டாங்கமாக உள்ளனர்.
லக்னத்திற்கும் சுப பார்வைகள் கிடைக்கவில்லை. மேலும் லக்னாதிபதி கேதுவுடன் இணைந்து ராகுவின் பார்வையில் அமர்ந்துள்ளார். மேலும் லக்னாதிபதியும் சுப கிரகமான குருவும் சஷ்டாங்கமாக உள்ளனர்.
இப்படி இருக்க இந்த ஜாதகம் புகழ் பெற்றது எப்படி?
லக்னாதிபதி சனி பத்தாம் வீட்டில், 5-க்குடைய புதனின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார்.அதாவது கேந்திரமும் கோணமும் தொடர்புடையதாக உள்ளது.
அதேபோல நான்கு மற்றும் 9ஆம் இடத்திற்கு அதிபதியான சுக்கிரன் கும்ப லக்கினத்திற்கு யோக காரகர் ஆகிறார். இதுவும் கோணமும் கேந்திரமும் தொடர்புடையது.
தர்மகர்மாதிபதி யோகம் சந்திர லக்னத்தில் இருந்து அமைகிறது. சந்திரனுக்கு 9 , 10 கிரகங்கள் கேந்திரத்தில் இணைந்துள்ளன.
நான்கில் உள்ள ராகுவின் திசையில் அவர் பெயரும் புகழும் பொருளும் கிடைக்கப் பெற்றார். வீடு மனைவி மக்கள் சொத்துக்கள் வாகனங்கள் சேர்க்கும் நான்காம் பாவம் ராகுவாக அமைந்ததால் கலைத்துறை மூலம் அவரால் சம்பாதிக்க முடிந்தது.
ஜாதகத்தில் சாதகமான சூழ்நிலைகளும் அசாதாரணமான சூழ்நிலைகளும் இரண்டும் கலந்துதான் இருக்கும். முழுமையான சூப்பர் ஜாதகம் என்பதும் இல்லை முழுமையான பாவ ஜாதகம் என்பதும் இல்லை. இரண்டும் கலந்ததுதான் மனித வாழ்க்கை. செவ்வாய் திசையில் சாதாரண வாழ்க்கையில் ஆரம்பித்த அவருடைய பயணம் அடுத்ததாக வந்த ராகு திசையில் கொடிகட்டி பறந்தது. காரணம், அவருடைய விடா முயற்சி. அவர் ஏற்றுக்கொண்ட துறையில் ஏற்படுத்திக்கொண்ட தனித்துவம். இந்த தனித்துவமான செயல்தான், தொழில்தான், கர்மா தான், அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
மக்கள் மத்தியில் அவ்வளவு செல்வாக்கு இருந்தும் நல்ல திறமை இருந்தும் அவரால் நடிப்பில் ஜொலித்த அளவிற்கு அரசியலில் அடியெடுத்து கூட வைக்க முடியவில்லை. காரணம் , அரசியலுக்குரிய ஆளுமை கிரகங்களில் ஒன்றான சூரியன் எட்டில் மறைந்ததும் பன்னிரண்டில் சந்திரன் மறைந்ததும் காரணமாக அமைந்துவிட்டது. ஆனால் கலைக்குரிய கிரகங்கள் அவருக்கு சாதகமாக இருந்ததால் அவர் ஏற்றுக்கொண்ட கலைத்துறையில் மட்டும் அவரால் வெற்றி பெற முடிந்தது.
நீங்கள் ஏற்றுக்கொண்ட துறையில், ஈடுபாட்டுடன் பயணியுங்கள். முழு ஈடுபாட்டுடனும் முழு முயற்சியுடனும் தொடர்ந்து உங்களுடைய செயலை செய்து வந்தீர்களானால் அதனுடைய பலன் சரியான கால நேரங்களில் நிச்சயம் கிடைக்கும்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி